குடிபோதையில் தினமும் தகராறு: கணவனை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண்


குடிபோதையில் தினமும் தகராறு: கணவனை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண்
x

தினமும் குடித்து விட்டு தகராறு செய்த கணவரை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை யமுனா நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மங்கள லட்சுமி (30). இவர், பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு தஸ்வந்த் (8) என்ற மகன் உள்ளார்.

சீனிவாசன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சீனிவாசன், மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த மங்கள லட்சுமி, வீட்டில் இருந்த கத்தியால் கணவரின் வயிற்றில் குத்தினார். படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த நசரத்பேட்டை போலீசார், சீனிவாசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நசரத்பேட்டை போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து கணவனை குத்திக்கொலை செய்த மங்கள லட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story