தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சேர்ப்பு


தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சேர்ப்பு
x
தினத்தந்தி 11 Feb 2024 3:02 AM GMT (Updated: 11 Feb 2024 6:49 AM GMT)

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை,

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் குறித்து கடந்த ஜூன் மாதம் சர்ச்சைக்குரிய வகையில் தி.மு.க. மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது.இது தொடர்பான புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தற்காலிகமாக நீக்கப்பட்டதாக திமுக தலைமை அறிவித்தது.

தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி எதிர்காலத்தில் இதுபோல அநாகரிகமாக பேசக்கூடாது என கூறி ஜூலை மாதம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க. தலைமை வெளியிட்ட அறிவிப்பில், சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழக பணியாற்றிட கோரிக்கை விடுத்ததை ஏற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story