வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவன் காயம்: சென்னையில் மீண்டும் பரபரப்பு


வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவன் காயம்: சென்னையில் மீண்டும் பரபரப்பு
x
தினத்தந்தி 8 May 2024 4:48 AM GMT (Updated: 8 May 2024 4:56 AM GMT)

நாய் உரிமையாளர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை,

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் அஸ்வந்த் (வயது 11). இவர் ஆலந்தூரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் அவரது அத்தை வீட்டுக்கு கோடை விடுமுறையை கழிக்க வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை அங்கு விளையாடிக் கொண்டிருக்கும்போது, அதே பகுதியில் வீட்டில் வளர்த்து வரும் சைபீரியன் ஹஸ்கி வகை நாய் ஒன்று திடீரென சிறுவன் அஸ்வந்தை கடித்தது. இதில் சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டது.

உடனே காயம் அடைந்த சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரின் நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 நாட்களுக்கு முன்பு நுங்கம்பாக்கத்தில் உள்ள பூங்கா ஒன்றில் சிறுமியை நாய் கடித்து குதறிய நிலையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story