பங்காரு அடிகளாரின் உடலுக்கு இன்று மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு


பங்காரு அடிகளாரின் உடலுக்கு இன்று மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு
x
தினத்தந்தி 20 Oct 2023 1:49 AM GMT (Updated: 20 Oct 2023 5:56 AM GMT)

பங்காரு அடிகளாரின் உடலுக்கு இன்று மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல்மருவத்தூர்,

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. பங்காரு அடிகளாரை பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோவிலின் பக்தர்களும் அவரை 'அம்மா' என்று அழைத்துவந்தனர்.

முன்னதாக உடல்நல குறைவு காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணச் செய்தியை அறிந்து பக்தர்கள் மேல்மருவத்தூரில் தற்போது குவிந்து வருகிறார்கள். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இதனிடையே பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் மேல்மருவத்தூர் செல்கிறார். இந்நிலையில் பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட வாய்ப்பு உள்ளதால் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story