நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் - செல்வப்பெருந்தகை கண்டனம்


நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது  தாக்குதல் - செல்வப்பெருந்தகை கண்டனம்
x

தாக்குதலில் சம்மந்தப்பட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகளை கொலைவெறியோடு தேடி வந்த கும்பல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டக் குழு அலுவலகத்தில் புகுந்து வன்முறைத் தாக்குதல் நடத்தியுள்ளது. மேஜை , நாற்காலி, கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அலுவலகத்தில் இருந்த கம்யூனிஸ்ட் தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் சம்மந்தப்பட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எனினும், தாக்குதலுக்கு முக்கிய நபராக இருந்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளான பின்பும், சாதி மறுப்பு திருமண தம்பதிகளை கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாக்கியிருப்பது மிகவும் வெட்கக் கேடானது. மிகுந்த கண்டனத்திற்குரியது.

இதில் பாதிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்க தோழர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய கொடிய சம்பவங்களை காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.


Next Story