ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நாகேந்திரன், அஸ்வத்தாமனுக்கு நீதிமன்ற காவல்


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நாகேந்திரன், அஸ்வத்தாமனுக்கு நீதிமன்ற காவல்
x

பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு வரும் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை பெரம்பூரில் கடந்த மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தற்போது வரை இந்த வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ரவுடி திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

தொடர்ந்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பொன்னை பாலு, அருள், ராமு உள்ளிட்டோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரசின் முன்னாள் நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமனை கடந்த 7ம் தேதி செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவரைத்தொடர்ந்து வேலூர் சிறையில் இருந்த பிரபல ரவுடியும், அஸ்வத்தாமனின் தந்தையுமான நாகேந்திரனை கடந்த 9ம் தேதி போலீசார் கைது செய்தனர். இருவரும் சேர்ந்துதான் ஆம்ஸ்ட்ராங்க் கொலைக்கு ரவுடி சம்போ செந்திலுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது. தற்போது அவர்கள் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இதில் ரவுடி நாகேந்திரன், போலீசார் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அமைதியாகவே இருந்ததாகவும், சில கேள்விகளுக்கு மட்டும் தனக்கும் ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் கூறி மவுனம் காத்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் ரவுடி நாகேந்திரனின் மகனான அஸ்வத்தாமன் தனது தந்தை மூலம்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் ஆம்ஸ்ட்ராங் உயிரோடு இருந்தால் கட்டப்பஞ்சாயத்து, மாமுல், அரசியல் எதிர்காலம் என அனைத்துமே பூஜ்ஜியமாகிவிடும் என்பதால் நாகேந்திரனிடம், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யுமாறு கூறியதாகவும் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோருக்கு ரவுடி நாகேந்திரனுடன் நீண்ட வருடங்களாக தொடர்பு இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அஸ்வத்தாமனின் தந்தை ரவுடி நாகேந்திரனின் வங்கி கணக்கில் கடந்த இரண்டு வருடங்களாக நடந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே அஸ்வத்தாமன் மற்றும் நாகேந்திரனின் மூன்று நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைவதால் அவர்கள் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அஸ்வத்தாமனை வரும் 21ம் தேதி வரையும், ரவுடி நாகேந்திரனை வரும் 28ம் தேதி வரையிலும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


Next Story