ராசிபுரம் அருகே போக்குவரத்து சீர் செய்யும் போது விபத்து - 2 போலீசார் உயிரிழப்பு


ராசிபுரம் அருகே போக்குவரத்து சீர் செய்யும் போது விபத்து - 2 போலீசார் உயிரிழப்பு
x

ராசிபுரம் அருகே விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்ட போலீசார் மீது சுற்றுலா வேன் மோதியதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

நாமக்கல்,

ராசிபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏ.கே.சமுத்திரம் பகுதியில், கடந்த சில மாதங்களாக புதிதாக மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதையொட்டி இணைப்புச் சாலை அமைக்கப்பட்டு, அதன் வழியாக வாகன போக்குவரத்து நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து ஓசூருக்கு சென்ற கார், வாகனங்களை இணைப்புச் சாலைக்கு திசைதிருப்புவதற்காக வைக்கப்பட்டு இருந்த சிறிய இரும்பு டேங்கின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் நள்ளிரவு 1.30 மணியளவில் அந்த வழியாக சென்ற லாரி ஒன்று, அங்குள்ள மண்திட்டின் மீது ஏறி போக்குவரத்துக்கு இடையூறாக நின்றது. தகவல் அறிந்த ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகனங்களை மீட்டு, போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பலி

அப்போது லாரியின் பின்னால் நின்று கொண்டிருந்த போலீசாரின் மீது, திருநள்ளாரில் இருந்து சேலம் மாவட்டம் இளம்பிள்ளைக்கு சென்ற சுற்றுலா வேன் ஒன்று அதிவேகமாக வந்து மோதியது.

இதில் புதுச்சத்திரம் போலீஸ் நிலைய சிறப்பு-சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், ராசிபுரம் போலீஸ் நிலைய போலீஸ்காரர் தேவராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். போலீஸ்காரர் தேவராஜன்(வயது 37) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர்(55) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பலியானார்.

போலீஸ் சூப்பிரண்டு ஆறுதல்

அதேபோல் இந்த விபத்தில் மற்றொரு போலீஸ்காரர் மணிகண்டன் மற்றும் சுற்றுலா வேனில் பயணம் செய்த 3 பேரும் காயமடைந்தனர். அவர்கள் 4 பேரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விபத்தில் பலியான போலீஸ்காரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

போக்குவரத்து சீர் செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story