4 மாணவிகள் சாவு: கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் சிறையில் அடைப்பு


4 மாணவிகள் சாவு: கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் சிறையில் அடைப்பு
x

மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் இறந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கரூர்

4 மாணவிகள் சாவு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 15 மாணவிகள் நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நடந்த கால்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடினர். பின்னர் அவர்கள் வேனில் புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது வரும் வழியில் மாயனூர் காவிரி ஆற்றில் மாணவிகள் இறங்கி குளித்தனர்.

அப்போது, தமிழரசி, இனியா, லாவண்யா, சோபியா ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்த பிறகு சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக இருந்ததாக மாணவிகளை அழைத்து சென்ற ஆசிரியர்கள் திலகவதி, செபாசகேயு மற்றும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை பொட்டுமணி ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சிறையில் அடைப்பு

இந்தநிலையில் மாணவிகள் பலியான சம்பவம் எதிரொலியாக ஆசிரியர் செபாசகேயு மீது பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக மாயனூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர்.

பின்னர் நள்ளிரவு கிருஷ்ணராயபுரம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அசோக்பிரசாத் முன்னிலையில் செபாசகேயுைவ போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதி உத்தரவின்படி, செபாசகேயு குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story