இலங்கை அரசை கண்டித்து 20-ந்தேதி ஆர்ப்பாட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவிப்பு


இலங்கை அரசை கண்டித்து 20-ந்தேதி ஆர்ப்பாட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவிப்பு
x

மீனவர்களின் சுயமரியாதையைச் சீண்டும் இலங்கை கடற்படையினரின் அராஜகப் போக்கினை கண்டிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டு மீனவர்களை கடல் எல்லையில் கைது செய்து துன்புறுத்துவதை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மத்திய அரசு தரப்பில் இருந்து உரிய எச்சரிக்கை, கண்டனக் குரல்கள் எழ வேண்டுமென பலமுறை வற்புறுத்தியுள்ளோம். ஆனால், மீனவர்களின் பிரச்சினையை புறக்கணிப்பதாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் சேது, அடைக்கலம், கணேசன் ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது வழக்குப் போட்டுள்ள இலங்கை அரசு அவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்துள்ளது. மேலும், அதனை செலுத்தவில்லை என்று கூறி மொட்டையடித்து, கைதிகள் பயன்படுத்தும் கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்து அவமதித்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்களின் சுயமரியாதையைச் சீண்டும் இலங்கை கடற்படையினரின் இந்த இழிவான அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

எனவே, இலங்கை அரசு, மத்திய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து வரும் 20-ந்தேதி ராமேசுவரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் மீனவர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு கண்டனக் குரல் எழுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story