சென்னையில் 13-ந்தேதி வி.சி.க. ஆர்ப்பாட்டம்


சென்னையில் 13-ந்தேதி வி.சி.க. ஆர்ப்பாட்டம்
x

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை நசுக்குவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"புரட்சியாளர் அம்பேத்கரின் நோக்கத்துக்கு மாறாக மாநில அரசுகளே எஸ்சி பட்டியலை பல்வேறு குழுவினராகப் பிரித்து இட ஒதுக்கீட்டையும் பங்கிட்டுத் தரலாம் எனவும், வருமான வரம்பை அளவுகோலாகக் கொண்ட 'க்ரீமிலேயர்' என்னும் பொருளாதாரத்தில் சற்று மேம்பட்ட பிரிவினரை இட ஒதுக்கீட்டிலிருந்து அகற்ற வேண்டும் எனவும் அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, காலப்போக்கில் பட்டியல் சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கி அழித்தொழிப்பதாக இருக்கிறது. இதனைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எதிர்வரும் ஆகஸ்ட்- 13ஆம் நாள் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எஸ் சி, எஸ் டி மக்களின் தற்போதைய மக்கள் தொகை எவ்வளவு என்பதைத் தெரிந்து கொள்ள முடியாதபடி மக்கள் தொகைக் கணக்கெடுப்பையே எடுக்காமல் ஒன்றிய பாஜக அரசு ஏமாற்றி வருகிறது. மேலும், 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்தவும் மறுத்து வருகிறது. ஒன்றிய அரசுக்கான பதவிகளில் எந்தத் துறையிலும் எஸ்சி பிரிவினருக்கு உரிய 15% இட ஒதுக்கீடு முழுமையாக நிரப்பப்படவில்லை.

அதுபோலவே எஸ்டி பிரிவினருக்கு உரிய 7.5% இட ஒதுக்கீட்டையும் நிரப்பவே இல்லை. மாநில அரசுகளும் அப்படியே எஸ்சி எஸ்டி பிரிவினரின் இட ஒதுக்கீட்டை நிரப்பாமல் இலட்சக்கணக்கான பணியிடங்களைப் பின்னடைவுக் காலிப் பணியிடங்களாகவே வைத்துள்ளன.

உண்மைநிலை இவ்வாறு இருக்க, பட்டியல் சமூக மக்களின் ஒற்றுமையைச் சிதைக்கும் நோக்கில் முரண்களைத் தீட்டி மோதவிட்டு அரசியல் ஆதாயம் தேட பாஜக அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது.

வழக்கமாக மாநில உரிமைகளைப் பறித்துத் தன்னகத்தே குவித்துக் கொள்ளும் ஒன்றிய பாஜக அரசு, இந்த வழக்கில் மட்டும் மாநிலங்களுக்கு அதிகாரம் தரலாம் என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து உள்ளது. பாஜக இதனை ஆதரிப்பதிலிருந்தே இந்த நிலைப்பாடு எஸ்சி -எஸ்டி மக்களுக்கு எதிரானதுதான் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே இட ஒதுக்கீடு கிடைக்காமல் இலட்சக்கணக்கான எஸ்சி எஸ்டி இளைஞர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும் சூழலில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எஸ்சி, எஸ்டி பிரிவில் ஒரு தலைமுறையினர் இட ஒதுக்கீட்டின் பயனை அடைந்து விட்டால் அவர்களை இட ஒதுக்கீட்டுத் தகுதியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மண்டல் குழு பரிந்துரை தொடர்பான வழக்கில், பிற்படுத்தப்பட்டோருக்கு சொல்லப்பட்ட 'கிரிமிலேயர்' முறையை இந்த வழக்கில் எஸ்சி- எஸ்டி பிரிவினருக்கும் பொருத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏழு நீதிபதிகளில் நான்கு பேர் அவ்வாறு கூறியிருப்பதால் ஒன்றிய பாஜக அரசு இதை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டு இருக்கிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

எஸ்சி எஸ்டி மக்களின் இட ஒதுக்கீடு உரிமை என்பது அரசமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்படுவதாகும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களை வெல்வோம் என்று பாஜக சொன்ன போது அவ்வாறு அதிக இடங்களைப் பெற்றால் அரசமைப்புச் சட்டத்தை மாற்றி இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறித்து விடுவார்கள் என்ற அச்சம் எஸ்சி எஸ்டி மக்களிடம் எழுந்தது. அதன் காரணமாக அவர்கள் பெருமளவில் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தனர். அதனால்தான் இப்போது பாஜக ஒரு சிறுபான்மை அரசை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக ஆட்சி அதிகாரத்தை பிடித்தால் அதைப் பயன்படுத்தி இட ஒதுக்கீட்டை ஒழித்து விடுவார்கள் என்ற அச்சம் இப்போது உண்மையாகி விட்டது. நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி அதைச் செய்வதற்கு பதிலாக உச்ச நீதிமன்றத்தைப் பயன்படுத்தி எஸ் சி எஸ்டி மக்களின் இட ஒதுக்கீட்டைப் பறிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது என்பதையே இந்தத் தீர்ப்பு நமக்கு தெளிவாகக் காட்டுகிறது.

*பட்டியல் சமூகத்தினரைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து இட ஒதுக்கீட்டைப் பங்கீடு செய்வதற்கு மாநில அரசுகளிடம் அதிகாரம் அளிப்பதையும்; வருமான வரம்பு அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு கிரீமிலேயர் முறையைத் திணிக்க முயல்வதையும் எதிர்த்து

உச்சநீதிமன்றத்தில் சீராய்வு செய்வதற்கு இந்திய ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டுமென்றும்;

*கிரீமிலேயர் குறித்து நீதிபதிகள் சொன்ன கருத்துக்களை அந்த தீர்ப்பிலிருந்து நீக்குவதற்கு ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டுமென்றும்;

*பட்டியல் சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கேற்ப உயர்த்த வேண்டுமென்றும் வலியுறுத்தி, இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

ஜனநாயக சக்திகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று இந்த கோரிக்கைகள் வெற்றி பெறத் தமது ஆதரவை நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story