நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள 12 மினி ஆட்டோக்கள்


நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள 12 மினி ஆட்டோக்கள்
x

நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள 12 மினி ஆட்டோவை அமைச்சர் அன்பரசன் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 12-வது வார்டில் உள்ள மகாலட்சுமி நகர் விரிவு பகுதியில் ரூ.41 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு விழா மற்றும் நகராட்சியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக 15-வது நிதி குழு மாநில திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பில் 12 மினி ஆட்டோக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மகாலட்சுமி நகரில் நடைபெற்றது.இதற்கு நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத்தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி, நகர மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட பேராசிரியர் க.அன்பழகன் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள 12 மினி ஆட்டோவை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், நகராட்சி நிர்வாக இயக்குனர் சசிகலா, நகராட்சி பொறியாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story