தமிழக மீனவர்கள் 10 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்


தமிழக மீனவர்கள் 10 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
x

இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

சென்னை,

61 நாள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்று கடந்த ஒரு சில நாட்களாகத்தான் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இதற்கிடையில் இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். மேலும் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீனவர்கள் 10 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

ஏற்கனவே 37 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள நிலையில், மேலும் 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story