வீட்டில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை கணவர் உள்பட 4 பேர் கைது


வீட்டில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை  கணவர் உள்பட 4 பேர் கைது
x

வரதட்சணை கொடுமையால் வீட்டில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மைசூரு:

தூக்குப்போட்டு தற்கொலை

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகாவை சேர்ந்தவர் ஜெகதீஸ். தொழிலாளி. இவருக்கும் பிரியாபட்டனாவை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகள் லட்சுமி (வயது 26) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். திருமணத்தின்போது ஜெகதீசுக்கு ரூ.1 லட்சம் ரொக்கமும், 100 கிராம் தங்கநகைகளும் வரதட்சணையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து திருமணமாகி ஓராண்டு நிறைவடைவதற்குள் மீண்டும் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி லட்சுமியை, அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமை படுத்தி உள்ளனர். இதையடுத்து ரூ.50 ஆயிரத்தை கொடுத்து, லட்சுமியை கணவர் வீட்டில், அவரது பெற்றோர் விட்டு சென்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கூடுதல் வரதட்சணை கேட்டு மீண்டும் லட்சுமியை, அவரது கணவர் கொடுமை படுத்தி உள்ளார்.

இதனால் தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்த லட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெகதீஸ் குடும்பத்தினர் உன்சூர் புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

4 பேர் கைது

மேலும் தூக்கில் தொங்கிய பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் கொடுமைபடுத்தியதால், மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதற்கிடையே மகளை கொலை செய்து ெஜகதீஸ் குடும்பத்தினர் தூக்கில் தொங்க விட்டதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லட்சுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜெகதீஸ், அவரது தந்தை நாகராஜ், தாய் லட்சுமம்மா, நேத்ரா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story