காதல் கணவர் இறந்த துக்கத்தில் திருநங்கை தற்கொலை


காதல் கணவர் இறந்த துக்கத்தில் திருநங்கை தற்கொலை
x

தந்தைக்கு செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பிவிட்டு திருநங்கை தற்கொலை செய்துகொண்டார்.

காரைக்கால்,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மஸ்தான் பள்ளித்தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 24). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறியதுடன் தனது பெயரை யாழினி என மாற்றிக் கொண்டார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நாகையை சேர்ந்த சந்தோஷ் (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் நிரவி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி திடீரென வலிப்பு ஏற்பட்டு சந்தோஷ் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது சந்தோசுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதற்காக தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் கடந்த 20-ந்தேதி இறந்தார்.

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் கடந்த 4 நாட்களாக யாழினி யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இதற்கிடையே அவர் தனது தந்தைக்கு செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில் காதல் கணவன் உயிரிழந்துள்ளது என்னை மிகவும் பாதித்துள்ளது. சந்தோஷை விட்டு என்னால் பிரிந்திருக்க முடியவில்லை. நானும் அவர் சென்ற இடத்திற்கு போகிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கூறப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த யாழினியின் தந்தை மற்றும் உறவினர்கள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது யாழினி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நிரவி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காதல் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் திருநங்கை தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story