மொழி வாரியாக மாநிலங்களை பிரித்தபோது எடுத்த முடிவே இறுதியானது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு


மொழி வாரியாக மாநிலங்களை பிரித்தபோது எடுத்த முடிவே இறுதியானது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
x

மொழி வாரியாக மாநிலங்களை பிரித்தபோது எடுத்த முடிவே இறுதியானது என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

எல்லை பிரச்சினை

கர்நாடக சட்டசபையில் நேற்று எல்லை பிரச்சினை குறித்த விவாதம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குறுக்கிட்டு பேசியதாவது:-

கர்நாடகம்-மராட்டியம் இடையேயான எல்லை பிரச்சினை குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எல்லை பிரச்சினைகள் அரசியல் அமைப்பு சட்டப்படி நாடாளுமன்றத்தில் தான் தீர்க்கப்பட வேண்டும். அதனால் மராட்டிய மாநிலம் தாக்கல் செய்துள்ள மனு மீது விசாரணை நடத்த வேண்டுமா? என்பது குறித்து சுப்ரீம் கோா்ட்டில் விசாரணை நடக்கிறது.

பெலகாவிக்கு வரக்கூடாது

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் மராட்டிய முதல்-மந்திரி, எல்லை விஷயம் குறித்து கருத்து கூறினார். அந்த கருத்துக்கு நான் தக்க பதில் கருத்தை பதிவு செய்தேன். மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்கு வரக்கூடாது என்று கூறி அந்த மாநில அரசுக்கு நமது தலைமை செயலாளர் கடிதம் எழுதினார். மராட்டிய அரசியல்வாதிகள் மக்களை தூண்டிவிடும் வகையில் கருத்துகளை கூறினர். இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் கர்நாடக அரசியல்வாதிகள் யாரும் மக்களை தூண்டிவிடும் வகையில் கருத்துகளை கூறவில்லை.

சாமானிய மக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட கூடாது, இரு தரப்பினரும் நல்லிணக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா முதல்-மந்திரிகள் கூட்டத்தை கூட்டினார். அதில் நான் கலந்து கொண்டு கர்நாடகத்தின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளேன். எனது பெயரில் சில கருத்துகள் டுவிட்டரில் வெளியானது. அது என்னுடைய கருத்து அல்ல.

அனைத்துக்கட்சி கூட்டம்

அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க இருந்தோம். ஆனால் அந்த கூட்டத்தை கூட்ட முடியவில்லை. வரும் நாட்களில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும். கல்வி, சுகாதாரம், வியாபாரத்திற்காக எல்லையில் உள்ள மக்கள் எல்லை தாண்டி சென்று வருவது வழக்கம். அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட கூடாது என்ற நோக்கத்தில் குழுக்களை அமைத்து செயல்படுமாறு உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். மராட்டிய மாநில எல்லையில் வசிக்கும் கன்னடர்களின் நலனை காக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது எடுத்த முடிவே இறுதியானது. இதில் மராட்டியம் எழுப்பும் பிரச்சினைகளை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story