இம்பால் சென்றடைந்தார் மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால்


இம்பால் சென்றடைந்தார் மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால்
x

தடையை மீறி ஸ்வாதி மாலிவால் இன்று மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றடைந்தார்.

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக நீடித்து வரும் கலவரம் மற்றும் அங்குள்ள பழங்குடி பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் ஆகியவை குறித்து எதிர்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால், மணிப்பூருக்கு சென்று வரும் 30-ந்தேதி வரை அங்கேயே தங்கி இருந்து பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்துப் பேசப்போவதாக தெரிவித்திருந்தார். ஆனால் ஸ்வாதி மாலிவாலுக்கு மணிப்பூர் மாநில அரசு அனுமதி மறுத்திருந்தது.

இந்த நிலையில் தடையை மீறி ஸ்வாதி மாலிவால் இன்று மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வாதி மாலிவால், மணிப்பூர் முதல்-மந்திரி பைரன் சிங்கை நேரில் சந்திக்க உள்ளதாகவும், வன்கொடுமைக்கு ஆளான பெண்களை சந்தித்து அவர்களுக்கு சட்ட உதவி மற்றும் நிவாரணம் கிடைக்கப் பெற்றதா என்பது குறித்து அறிய உள்ளதாகவும் தெரிவித்தார்.

அங்கு அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும், பிரதமர் மோடி மற்றும் மத்திய பெண்கள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி ஆகியோர் மணிப்பூர் வர வேண்டும் என்றும் ஸ்வாதி மாலிவால் வலியுறுத்தியுள்ளார்.



Next Story