மம்தா பானர்ஜி பற்றி அவதூறு கருத்து: பா.ஜ.க. வேட்பாளர் பிரசாரம் செய்ய தடை


மம்தா பானர்ஜி பற்றி அவதூறு கருத்து: பா.ஜ.க. வேட்பாளர் பிரசாரம் செய்ய தடை
x

பா.ஜ.க. வேட்பாளரும், முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய் தேர்தல் பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா,

முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாய், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள தம்லுக் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு வரும் 25-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனிடையே கடந்த 15-ந்தேதி ஹல்தியா பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குறித்து தரக்குறைவான முறையில், மிகவும் மோசமான விமர்சனத்தை முன்வைத்ததாக கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகார் தொடர்பாக கடந்த 17ம் தேதி அபிஜித்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் நேற்று (20ம் தேதி) அதற்கு அவர் விளக்கம் அளித்து இருந்தார்.

இந்நிலையில், அபிஜித்தின் பேச்சுக்கள் தேர்தல் விதிமுறைகளை மீறியது என தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதையடுத்து இன்று மாலை 5 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு அபிஜித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுவெளியில் பேசும் போது கவனத்துடன் பேச வேண்டும் எனவும் அவரை தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. அவரது பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.


Next Story