லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பஸ்: 6 பேர் உடல்கருகி பலி


லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பஸ்: 6 பேர் உடல்கருகி பலி
x

லாரி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.

அமராவதி,

ஆந்திர மாநிலம் பபட்லா மாவட்டம் சின்னகஞ்சம் பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி நேற்று இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 42 பேர் பயணித்தனர்.

பல்நாடு மாவட்டம் சில்லக்கல்ரிபேட்டை பகுதியில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரி மீது பஸ் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ் முழுவதும் தீப்பற்றியது.

அதிகாலை என்பதால் பயணிகள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர், பயணிகள் என மொத்தம் 6 பேர் தீயில் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும், படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story