ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்; மக்கள் அதிக அளவில் வாக்களித்து புதிய சாதனை படைக்க பிரதமர் மோடி வேண்டுகோள்


ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்; மக்கள் அதிக அளவில் வாக்களித்து புதிய சாதனை படைக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
x

முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளம் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தெரிவித்து கொண்டார்.

புதுடெல்லி,

200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. எனவே அங்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ஆளும் காங்கிரசை சேர்ந்த சச்சின் பைலட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ரா என கட்சியின் மாநில தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். முதல்-மந்திரி அசோக் கெலாட்டும் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

இதேபோன்று, பா.ஜ.க. சார்பில், தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிலையில், மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 இடங்களில் ஒன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இது மாலை 6 மணி வரை நடக்கிறது. இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வருகிற 3-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. வாக்களிப்பதற்காக மக்கள் ஆர்வத்துடன் காலையிலேயே வாக்கு சாவடிகளுக்கு வருகை தந்துள்ளனர்.

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது. மக்கள் அதிக அளவில் வாக்களித்து ஒரு புதிய சாதனையை படைக்க வேண்டும் என அனைவருக்கும் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன்.

இந்த தருணத்தில், முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளம் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என அவர் பதிவிட்டு உள்ளார்.


Next Story