குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற தீர்ப்பு ரத்து - சுப்ரீம் கோர்ட்டு


குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற தீர்ப்பு ரத்து - சுப்ரீம் கோர்ட்டு
x

கோப்புப்படம் 

குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளது.

புதுடெல்லி,

சென்னை ஐகோர்ட்டில், மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக கூறி தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,

90-களில் பிறந்த இளைஞர்கள் எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருந்தார்களோ, அதைப்போலவே இன்றைய இளைஞர்கள் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர். அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதிலாக, இந்த கெட்ட பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்பதற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கும் அளவிற்கு சமூகம் பக்குவமடைய வேண்டும்.

ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு பள்ளிகளில் இருந்து இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம் எனக்கூறி அந்த இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து குழந்தைகள் உரிமை அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, போக்சோ சட்டத்தின் படி குழந்தைகள் சார்ந்த ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தாலே குற்றம். குழந்தைகள் ஆபாச படம் என்ற சொல்லாடலை ஐகோர்ட்டுகள் பயன்படுத்தக் கூடாது.

குழந்தைகள் ஆபாச படம் என்பதற்கு பதிலாக Child Sexual and Exploitative and Abuse Material பயன்படுத்தும் வகையில் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என கூறி சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேசின் உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story