ஒடிசா ரெயில் விபத்து பலி எண்ணிக்கை 288 ஆக அதிகரிப்பு- 56 பேர் கவலைக்கிடம்
Live Updates
- 3 Jun 2023 11:22 AM GMT
ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு
ரெயில் விபத்து நடைபெற்ற இடமான பாஹநஹாவில் பிரதமர் நரேந்திர மோடிநேரில் ஆய்வு செய்து வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்வதையொட்டி பாஹநஹாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
டெல்லியிலிருந்து புவனேசுவரத்துக்கு தனி விமானத்தில் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் பாஹநஹாவுக்கு வருகை தந்துள்ளார்.
ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார்.
சீரமைப்பு பணிகள் குறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி
ஆய்வுக்கு பிறகு கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.
- 3 Jun 2023 10:20 AM GMT
ரெயில் விபத்தை தவிர்க்கும் கவாச் தொழில்நுட்பம் ஏன் கோரமண்டல் பாதையில் இல்லை? - திரிணாமுல் காங்கிரஸ்
திரிணாமூல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலேட் தனது டுவிட்டர் பக்கத்தில், “ ரயில் விபத்தை தவிர்க்கும் கவாச் தொழில்நுட்பம் ஏன் கோரமண்டல் பாதையில் இல்லை?ஏன் மொத்த இந்திய ரெயில் பாதைகளில் 2% மட்டுமே கவாச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது..
மத்மா பானர்ஜி (2011 -2012) ரயில்வேதுறை அமைச்சராக இருந்தபோது Train Collision Avoidance System ( ரயில் மோதுவதை தவிர்க்கும் அமைப்பு ) என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் வழக்கம்போல் அதிகாரத்துக்கு வந்ததும் கவாச் என்று பாஜக அந்த திட்டத்துக்கு பெயர் மாற்றி அதற்கான பெருமையை ஏற்றுக் கொண்டது. ஆனால் 2019 ஆம் ஆண்டுவரை இந்த தொழில்நுட்பத்தில் எந்தவித முன்னேற்றத்தையும் பாஜக அரசு செய்யவில்லை. 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் மூன்று நிறுவனங்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
- 3 Jun 2023 10:02 AM GMT
ஒடிசா ரயில் விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்த பின் மேற்கு வங்ககாள முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
"கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சிறந்த விரைவு ரெயில்களில் ஒன்று; நான் 3 முறை ரெயில்வே மந்திரியாக இருந்துள்ளேன், நான் பார்த்ததிலேயே இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரெயில் விபத்து இதுவாகும்!
இதுபோன்ற வழக்குகள் ரெயில்வே பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் விசாரித்து அறிக்கை தருகிறார்கள்; எனக்குத் தெரிந்த வரை ரெயிலில் விபத்துகளை தடுக்கும் பாதுகாப்பு கருவி எதுவும் இல்லை;
பாதுகாப்பு கருவி ரெயிலில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது; இறந்தவர்களை திரும்ப கொண்டு வர முடியாது, ஆனால் இப்போது எங்களின் மீட்பு பணி தொடரும்!" என கூறினார்.
- 3 Jun 2023 7:52 AM GMT
ஒடிசா ரெயில் விபத்து: சிறப்பு ரெயில்கள் மூலம் 383 பேர் சென்னை அழைத்து வரப்படுகிறார்கள்
சென்னை
ஒடிசாவில் பாலசோர் பகுதியில் ரெயில் விபத்தால் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் தவிப்புக்குள்ளானார்கள். விபத்துக்குள்ளான 2 பயணிகள் ரெயிலில் சுமார் 2 ஆயிரம் பயணிகள் பயணித்தது தெரிய வந்து உள்ளது.
அவர்களில் பாதி பேர் காயம் அடைந்து உள்ளனர். சுமார் 1000 பயணிகள் அந்த பகுதியில் நேற்று இரவு தவிக்க நேரிட்டது. பலர் உடனடியாக பஸ்களை பிடித்து மற்ற பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து எப்படி செல்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பயணிகள் விபத்து நடந்த பகுதிக்கு அருகிலேயே அமர்ந்திருந்தனர்.
அவர்களை குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை ரெயில்வே அதிகாரிகள் இன்று காலை செய்தனர். இதற்காக விபத்து பகுதிக்கு அருகே வரை சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மேற்கு வங்காளத்தில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
சென்னை சென்ட்ரலில் இருந்தும் சிறப்பு ரெயில் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது. அந்த ரெயில் பத்ரக் நகரம் வரை சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றி சென்னை திரும்பும் என்று தெரிய வந்துள்ளது. அந்த ரெயிலில் 250 பயணிகள் அழைத்துவரப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல புவனேஸ்வரத்தில் இருந்தும் மற்றொரு சிறப்பு ரெயில் சென்னைக்கு இயக்கப்படுகிறது. அந்த ரெயிலில் 133 பேர் அழைத்துவரப்படுகிறார்கள்.
மொத்தம் 383 பேர் ஒடிசாவில் இருந்து சென்னை திரும்புகிறார்கள் இவர்களை அழைத்து வரும் சிறப்பு ரெயில்கள் நாளை காலை சென்னை ரெயில் நிலையம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 3 Jun 2023 7:36 AM GMT
ஓடிசா ரெயில் விபத்து: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆழ்ந்த இரங்கல்
ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.