நீட்தேர்வு முறைகேடு: தேர்வு முகமை தலைவர் திடீர் நீக்கம்


நீட்தேர்வு முறைகேடு: தேர்வு முகமை தலைவர் திடீர் நீக்கம்
x

 சுபோத் குமார்

நீட்தேர்வு முறைகேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை தலைவர் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

மருத்துவக் கல்விக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தன.

தொடக்கத்தில் இந்த குற்றச்சாட்டுகளை தேசிய தேர்வு முகமை மறுத்து வந்தது. பின்னர் இந்த முறைகேடு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தேர்வில் முறைகேடு நடைபெற்றதை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஒப்புக்கொண்டார்.

இதேபோல் பேராசிரியர்களுக்கான நெட் தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத்தொடர்ந்து அந்த தேர்வும் ரத்துசெய்யப்பட்டது.

இந்தநிலையில் தேசிய தேர்வு முகமை தலைவராக இருந்த சுபோத் குமாரை நேற்று திடீரென்று மத்திய அரசு நீக்கியது. தற்போது அவர் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், இந்திய வர்த்தக மேம்பாட்டு தலைவரான பிரதீப் சிங் கரோலியாவுக்கு தேசிய தேர்வு முகமை தலைவர் பொறுப்பு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.


Next Story