ஆந்திர முதல்-மந்திரி அலுவலகத்தில் வினோத ஊழல்: முட்டை பப்ஸ் வாங்கிய செலவு ரூ.3.6 கோடியா? சிக்கலில் ஜெகன்மோகன்ரெட்டி


ஆந்திர முதல்-மந்திரி அலுவலகத்தில் வினோத ஊழல்: முட்டை பப்ஸ் வாங்கிய செலவு ரூ.3.6 கோடியா? சிக்கலில் ஜெகன்மோகன்ரெட்டி
x

முந்தைய ஆட்சியில் இருந்த காலத்தில் முட்டை பப்ஸ் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமராவதி,

நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்கு சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. இதன்படி அம்மாநில முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். இந்தசூழலில் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரி ஆனது முதல் தன்னை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டி குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில், ஜெகன் ஆட்சியில் இருந்த காலத்தில் முட்டை பப்ஸ் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அடுத்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்படி 2019 முதல் 2024 வரை ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆ.ர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன்ரெட்டி ஆட்சியில் இருந்தது. அப்போது, முதல்-மந்திரி அலுவலகத்துக்காக ரூ.3.62 கோடிக்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன.

வருடத்துக்கு ரூ.72 லட்சதுக்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது என்று தெலுங்குதேசம் கட்சி கூறியுள்ளது. இது, தினசரி 993 முட்டை பப்ஸ்கள் சாப்பிடுவதற்கு சமம் என்றும், ஐந்தாண்டு காலத்தில், இதன் எண்ணிக்கை 18 லட்சம் முட்டை பப்ஸ்கள் எனவும் கூறப்படுகிறது. இதன்மூலம், பப்ஸ்களுக்கு மட்டுமே ஐந்தாண்டுகளில் மூன்றே முக்கால் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்றால், மற்ற விவகாரங்களுக்கு ஜெகன்மோகன் ரெட்டி அரசு பணத்தை எந்த அளவுக்கு முறைகேடாக பயன்படுத்தியிருக்கிறார் என்பதை இதை வைத்தே கண்டுபிடிக்க முடியும் என்று தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.


Next Story