கவர்னருக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட கூடாது: முதல்-மந்திரி மம்தாவுக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு


மம்தாவுக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 July 2024 9:45 PM GMT (Updated: 16 July 2024 9:45 PM GMT)

கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியா் ஒருவா் தனக்கு, கவர்னர் ஆனந்த போஸ் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டினாா்.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கும், கவர்னர் ஆனந்த போசுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

இந்த சூழலில் கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியா் ஒருவா், தனக்கு கவர்னர் ஆனந்த போஸ் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டினாா். இது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கவர்னர் மாளிகைக்குச் செல்ல பெண்கள் அஞ்சுவதாக முதல்-மந்திரி மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

இதையடுத்து கொல்கத்தா ஐகோர்ட்டில் மம்தாவுக்கு எதிராக ஆனந்த போஸ் அவதூறு வழக்கு தொடுத்தாா். மம்தா தவிர்த்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சயந்திகா பானர்ஜி, ரேயத் ஹொசைன் சர்க்கார் மற்றும் கட்சியின் தலைவர் குணால் கோஷ் ஆகியோரின் மீதும் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணா ராவ் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, கவர்னருக்கு எதிராக அவதூறான கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்றும் பொது நலன் சாா்ந்த விவகாரங்களில் நியாயமான கருத்தையே கூறியதாகவும் மம்தா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, "மம்தா பானர்ஜி உள்ளிட்ட 4 பேரும் ஆகஸ்டு 14, 2024 வரை கவர்னர் ஆனந்த போசுக்கு எதிராக தவறான மற்றும் அவதூறு கருத்துகளை தெரிவிக்கவோ, அறிக்கைகளை வெளியிடவோ கூடாது" என உத்தரவிட்டார்.


Next Story