மோடி பதவியேற்பு விழா: உலக தலைவர்கள் வருகை


மோடி பதவியேற்பு விழா: உலக தலைவர்கள் வருகை
x

மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க இருப்பதை முன்னிட்டு பா.ஜனதாவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

புதுடெல்லி,

மோடி 3வது முறையாக பதவியேற்கும் விழா இன்று இரவு 7: 15 மணிக்கு நடக்கிறது. இதற்காக டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது. உலக தலைவர்கள், பல்வேறு மாநில கவர்னர்கள், மாநில முதல்-மந்திரிகள்,திரைப்பிரபலங்கள்,தொழிலதிபர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இவ்விழாவில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகமது முயிசு, சீஷெல்ஸ் துணை அதிபர் அஹமது அபிப், வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரிஷியஸ் பிரதமர் பிரவின் குமார் ஜெகநாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா, பூடான் பிரதமர் ஷெரீங் டோப்கே ஆகியோர் பங்கேற்கின்றனர்.இதற்காக ஷேக் ஹசீனா, அஹமது அபிப், ஆகியோர் நேற்று டெல்லி வந்தனர்.

இந்நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முயிசு இன்று காலை டெல்லி வந்தார். அவரை வெளியுறவு அமைச்சக அதிகாரி பவன் கபூர் விமான நிலையத்தில் வரவேற்றார்.இதனைத் தொடர்ந்து டெல்லி வந்த மொரிஷியஸ் பிரதமர் பிரவின் குமார் ஜெகநாத்தை வெளியுறவு அமைச்சக அதிகாரி குமரன் வரவேற்றார். இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, பூடான் பிரதமர் ஷெரீங் டோப்கேவை வெளியுறவு அமைச்சக அதிகாரி பவன் கபூர் டில்லி விமான நிலையத்தில் வரவேற்றார்.இந்த முறை ஆசிய நாட்டின் தலைவர்கள் பெரும்பாலானோர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர்.

டெல்லியில் மோடியின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு நாட்டின் முக்கிய பிரபலங்கள் மற்றும் உலகத்தலைவர்கள் பங்கேற்க இருப்பதால் ஒட்டுமொத்த டெல்லியும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பதவியேற்க இருப்பதை பா.ஜ.க.வினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.


Next Story