'மும்பை, எனக்கு உங்கள் உதவி தேவை...' - தெரு நாய்க்காக மக்களிடம் உதவி கேட்ட ரத்தன் டாடா


மும்பை, எனக்கு உங்கள் உதவி தேவை... - தெரு நாய்க்காக மக்களிடம் உதவி கேட்ட ரத்தன் டாடா
x

தொழில் அதிபர் ரத்தன் டாடா தெரு நாய்க்காக மும்பை மக்களிடம் உதவி கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை,

பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா நேற்று முன்தினம் இரவு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் தனது கால்நடை ஆஸ்பத்திரியில் டிக் காய்ச்சல், ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாத தெரு நாய் சிகிச்சை பெற்று வருகிறது. அதற்கு அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது எனக்கூறி மும்பை மக்களிடம் உதவி கேட்டு இருந்தார்.

தெரு நாய்க்காக தொழில் அதிபர் ரத்தன் டாடா உதவி கேட்டது பொதுமக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ரத்தன் டாடாவுக்கு பிற உயிரினங்கள் மீதான அன்பை பாராட்டி பலரும் கருத்து பதிவிட்டனர்.

இந்தநிலையில் நோயால் பாதிக்கப்பட்ட நாய்க்கு ரத்தம் கிடைத்துள்ளது. அது குறித்த பதிவையும் ரத்தன் டாடா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில், எனது பதிவை பார்த்து உதவி செய்ய முன்வந்த மும்பைக்கு நன்றி என தெரிவித்து உள்ளார்.

மேலும் காப்ஸர், லியோ, ஸ்கூபி, ரூனி, இவான் ஆகிய பெயரை கொண்ட நாய்கள் ரத்தம் தர முன்வந்து உள்ளதாகவும், இதில் பொருத்தமான ரத்தம் உள்ள நாயின் ரத்தம், சிகிச்சை பெறும் நாய்க்கு செலுத்தப்படும் எனவும் அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.




Next Story