தமிழ்நாடு நீரை வீணாக்குவதை தடுக்கவே மேகதாது திட்டம்: சித்தராமையா


தமிழ்நாடு நீரை வீணாக்குவதை தடுக்கவே மேகதாது திட்டம்: சித்தராமையா
x

மேகதாது திட்டத்தால் கர்நாடகாவைவிட தமிழகத்திற்குதான் அதிக பயன் இருக்கும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு,

கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் சமர்ப்பண பூஜை செய்த பின், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுடன் விவாதிக்க கர்நாடக மாநில அரசு தயாராக இருக்கிறது. மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. தமிழ்நாடு நீரை வீணாக்குவதை தடுக்கவே மேகதாது திட்டம். மத்திய அரசு தேவையான அனுமதி அளித்தால், கர்நாடக மாநிலம் திட்டத்தை அமல்படுத்த தயாராக உள்ளது.

நாங்கள் தயாராக இருக்கும் நிலையில், அவர்கள் விவாதிக்க தயாராக இல்லை. மேகதாது எங்களுடைய உரிமை. எங்கள் மாநிலத்தில் நீர்த்தேக்கம் கட்டப்படும். தமிழ்நாடு தேவையில்லாமல் பிரச்சினையை உருவாக்குகிறது.

வழக்கமான மழைக்காலங்களில் கேஆர்எஸ் உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டும். அப்போது 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்படும். 2022-23-ல் 665 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த வருடம் அதிகமான தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது. ஏற்கனவே 83 டிஎம்சிக்கு அதிகமான நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் குறைவான காலத்தில் எங்களால் அதிகமான தண்ணிர் திறந்து விட முடியாது.

கர்நாடகா மாநிலத்தில் அணைகள் நிரம்பும்போது கூடுதல் நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. தமிழகத்தில் மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டும்போது கடலுக்கு நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கூடுதல் நீரை மேகதாதுவில் சேமித்து வைக்க முடியும். இது நம்மை விட தமிழகத்திற்குத்தான் பலன் தரும். இருந்தும் அரசியலுக்காக பிரச்சினைகளை கிளப்பி விடுகிறார்கள். இத்திட்டத்திற்கு இதுவரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story