குவைத் தீவிபத்து: பலியான இந்தியர்களின் உடல்கள் கொச்சி கொண்டு வரப்பட்டன


குவைத் தீவிபத்து: பலியான இந்தியர்களின் உடல்கள் கொச்சி கொண்டு வரப்பட்டன
x

தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வருகை தந்து உடல்களை பெற்றுச் செல்ல பலியானவர்களின் உறவினர்கள் சோகத்துடன் காத்திருக்கிறார்கள்.

கொச்சி,

குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 49-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 45 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்தது. இதில் கேரளாவை சேர்ந்த 24 பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை மீட்டு, தாயகத்துக்கு அனுப்பி வைக்கும் பணிகளை துரிதப்படுத்த வெளியுறவுத் துறை இணை மந்திரி கீர்த்திவர்தன் சிங், துறை அதிகாரிகள் நேற்று குவைத் சென்றனர். பலியான இந்தியர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு தாய்நாட்டிற்கு எடுத்து வரும் நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்றன. இந்தியர்களின் உடல்களை எடுத்து வர விமானப்படைக்கு சொந்தமான சி 130 என்ற விமானம் நேற்று குவைத் சென்றது.

இந்த நிலையில், குவைத் தீ விபத்தில் பலியானவர்களின் உடலை எடுத்துக் கொண்டு விமானம் கொச்சி வந்தடைந்தது. கொச்சியில் இருந்து உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்காக கொச்சி விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தமிழர்களின் உடலை பெற அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சி சென்றுள்ளார்.


Next Story