மேற்கு வங்காளம் : மீண்டும் 'பணி புறக்கணிப்பு'போராட்டத்தை தொடங்கிய பயிற்சி டாக்டர்கள்


மேற்கு வங்காளம் : மீண்டும் பணி புறக்கணிப்புபோராட்டத்தை தொடங்கிய பயிற்சி டாக்டர்கள்
x

கொல்கத்தாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டாக்டர் ஒருவரை உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

கொல்கத்தா,

பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மேற்கு வங்காளத்தின் பயிற்சி இளநிலை டாக்டர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மீண்டும் 'முழு பணி புறக்கணிப்பு' போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இளநிலை பயிற்சி மருத்துவர்கள் சங்கங்கள் மேற்கொண்ட 8 மணி நேர ஆலோசனைக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. மருத்துவமனையின் பாதுகாப்பு, மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவர்களை அச்சுறுத்தும் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை முன்வைத்து மீண்டும் இளநிலை பயிற்சி டாக்டர்கள் போராடுகின்றனர்.

இது குறித்து மேற்கு வங்க இளநிலை பயிற்சி டாக்டர்கள் முன்னணி வெளியிட்ட அறிக்கையில்,

மேற்கு வங்காளத்தில் பயிற்சி டாக்டர்கள் இன்றிலிருந்து (அக்டோபர் 1) முழுமையாக பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளோம். டாக்டர்களின் பாதுகாப்பு குறித்தும், மருத்துவமனைகளில் அச்சமற்ற பணிச்சூழல் குறித்தும் அரசு தரப்பிலிருந்து தெளிவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொல்கத்தா புறநகர் பகுதியான காமர்ஹத்தி பகுதியில் உள்ள சாகோர் தத்தா அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஒரு நோயாளி உயிரிழந்தார். அந்த நோயாளியின் உறவினர்கள், டாக்டர் மற்றும் செவிலியர்களை தாக்கினர். இதைத் தொடர்ந்து கொல்கத்தா உட்பட மேற்கு வங்காளம் முழுவதும் டாக்டர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். நேற்று முன் தினம் இரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர். இந்நிலையில், இன்று காலை முதல் இளநிலை பயிற்சி டாக்டர்கள் மீண்டும் 'முழு பணி புறக்கணிப்பு' போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.


Next Story