கேரள திரையுலகில் நடிகைகளிடம் அத்துமீறும் முன்னணி நடிகர்கள் - வெளியான அதிர்ச்சி அறிக்கை


கேரள திரையுலகில் நடிகைகளிடம் அத்துமீறும் முன்னணி நடிகர்கள் - வெளியான அதிர்ச்சி அறிக்கை
x

கோப்புப்படம்

கேரள திரையுலகில் முன்னணியில் இருப்பவர்களே நடிகைகளிடம் அத்துமீறலில் ஈடுபடுவதாக அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

மலையாளத் திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் கடுமையான பாகுபாடுகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஹேமா தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்ய கேரள மாநில அரசு உத்தரவிட்டு இருந்தது.

இந்தக் கமிஷன் பாதிக்கப்பட்ட பல நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களிடம் நேரில் விசாரணை நடத்தி 2019ம் ஆண்டு கேரள முதல்-மந்திரியிடம் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இதனைத் தொடர்ந்து தகவல் உரிமை ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியிட உத்தரவிட்டது.

ஆனால் ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று பிரபல மலையாள தயாரிப்பாளர் சஜிமோன் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் தள்ளுபடி செய்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் ஹேமா கமிஷன் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அந்த அறிக்கையில், "நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் மலையாள திரையுலகில் பெருமளவு பரவியிருக்கிறது. பாலியல் உறவுக்கு சம்மதிக்கும்படி நடிகைகளை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கட்டாயப்படுத்துகிறார்கள்.

பாலியல் ரீதியாக இணங்கும் நடிகைகளை ஒத்துழைக்கும் நடிகைகள் என வகைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கே பட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. மலையாள திரையுலகத்தை மாபியா கும்பல் கட்டுப்படுத்துகிறார்கள். முத்தக் காட்சி, நிர்வாணமாக நடிக்க நடிகைகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மறுத்தால் மிரட்டப்படுகிறார்கள்.

நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்ட பட்டியலில் முன்னணி நடிகர்கள் இருக்கின்றனர். இயக்குநர்கள் மீதே அதிக புகார்கள் இருக்கிறது. பாலியல் ரீதியாக ஒத்துழைக்க மறுக்கும் நடிகைகளுக்கு சமூக ஊடகங்கள் மூலம் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பிரச்சனைக்குரியவர்கள் என முத்திரை குத்தப்படுகிறார்கள். தனிப்பட்ட முறையில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாகவே நடிகைகள் போலீசில் புகார் அளிக்க முன் வருவதில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "நடிகர் நடிகைகளுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். குற்றப்பின்னணி உள்ளவர்களை ஓட்டுநர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும். படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகைகளுக்கு பாதுகாப்பான இருப்பிடம் போக்குவரத்தைத் தயாரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் மதுபானம், போதைப்பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும்" என்று அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


Next Story