காஷ்மீர் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ், தேசிய மாநாடு இடையே தொகுதிப்பங்கீடு நிறைவு


காஷ்மீர் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ், தேசிய மாநாடு இடையே தொகுதிப்பங்கீடு நிறைவு
x

5 தொகுதிகளில் காங்கிரஸ், தேசிய மாநாடு ஆகிய இரு கட்சிகளும் தனித்து களமிறங்குகின்றன.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு தற்போது சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி என்று மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகள் இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது. எனினும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.

அங்கு முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள் என்பதால், இந்த பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க காங்கிரஸ் முயன்றது. இதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் இருவரும் நேற்று காஷ்மீர் சென்று, தேசிய மாநாடு தலைவர்களை சந்தித்து பேசினர். இதில் தொகுதிப்பங்கீடு இறுதியானது.

அதன்படி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடுகின்றன. அதேநேரம் 5 தொகுதிகளில் இரு கட்சிகளும் தனித்து களமிறங்குகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பாந்தர்ஸ் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளன.

தொகுதிப் பங்கீட்டுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா, "தேசிய மாநாடு 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடும். 5 இடங்களில் நட்பு ரீதியான அதேநேரம் ஒழுக்கமான போட்டி இருக்கும். இந்த 88 இடங்கள் போக சி.பி.எம்.க்கு 1 இடத்தையும், பாந்தர்ஸ் கட்சிக்காக 1 இடத்தையும் ஒதுக்கி உள்ளோம்" என்று அவர் கூறினார். அப்போது கே.சி.வேணுகோபால் மற்றும் தேசிய மாநாடு தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story