அநீதிக்கு எதிராக நாடு முழுவதும் 'இந்தியா கூட்டணி' ஒன்றுபட்டு போராடும் - ராகுல்காந்தி


அநீதிக்கு எதிராக நாடு முழுவதும் இந்தியா கூட்டணி ஒன்றுபட்டு போராடும் - ராகுல்காந்தி
x
தினத்தந்தி 25 Jan 2024 7:56 AM GMT (Updated: 25 Jan 2024 8:32 AM GMT)

மேற்கு வங்காளத்தில் 6 மாவட்டங்கள் மற்றும் 6 மக்களவைத் தொகுதிகளுக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா,

ராகுல்காந்தி தலைமையில் நடந்துவரும் 'பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை' கடந்த 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக ராகுல்காந்தி அசாமில் இருந்து கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள பக்ஷிர்ஹாட் வழியாக மேற்கு வங்காளம் வந்தடைந்தார்.

ராகுல்காந்தி வருகையையொட்டி மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தார். இதனையடுத்து கூச் பெஹார் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி கூறியதாவது,

'பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் வெறுப்பையும் வன்முறையையும் பரப்பி வருவதாகவும், நாடு முழுவதும் அநீதி நிலவி வருவதால், யாத்திரையில் 'நியாய' என்ற வார்த்தை இணைக்கப்பட்டுள்ளதாகவும். அநீதிக்கு எதிராக நாடு முழுவதும் இந்தியா கூட்டணி போராடும்' என்று கூறினார்.

தேர்தலில் தனித்துப் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் முடிவுக்கு ஒரு நாட்களுக்கு பிறகு, நாடு முழுவதும் அநீதியை எதிர்த்துப் போராடுவதில் எதிர்க்கட்சியான இந்தியக் கூட்டணி ஒற்றுமையில் நம்பிக்கை இருப்பதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தின் மூலம் இந்தியா கூட்டணி மீதான நம்பிக்கையை ராகுல்காந்தி வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த யாத்திரையின்போது மேற்கு வங்காளத்தில் ராகுல்காந்தி 5 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story