ஹேமா கமிட்டி அறிக்கை: 9ம் தேதி கோர்ட்டில் சமர்ப்பிப்பு


ஹேமா கமிட்டி அறிக்கை: 9ம் தேதி கோர்ட்டில் சமர்ப்பிப்பு
x

கோப்புப்படம்

மலையாள திரையுலகில் தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை வரும் 9ம் தேதி கோர்ட்டில் கேரள அரசு சமர்ப்பிக்க உள்ளது. விடுபட்ட பக்கங்கள் உள்பட முழுமையான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் கேரள அரசு சமர்ப்பிக்க உள்ளது.

முன்னதாக, ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை, டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பிக்குமாறு கேரள ஐகோர்ட்டு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story