நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: 6 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: 6 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்
x

File image

நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் அலுவல் ஆலோசனைக் குழுவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் முழு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வரும் 23ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில், இந்த கூட்டத்தொடரில் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா உள்பட 6 புதிய மசோதாக்களை மத்திய அரசுதாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிதி மசோதா தவிர, சிவில் விமானப் போக்குவரத்துத்துறையில் எளிதாக வணிகம் செய்வதற்கான ஏற்பாடுகளை வழங்குவதற்காக, தற்போதுள்ள விமான சட்டம் 1934ல் திருத்தம் செய்து அதற்கு பதிலாக பாரதிய வாயுயான் விதேயக் 2024 மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதேபோல், பாரதிய வாயுயான் விதேயக் 2024, சுதந்திரத்துக்கு முந்தைய கால சட்டத்தை மாற்றுவதற்கான கொதிகலன்கள் (பாய்லர்கள்) மசோதா, காபி (மேம்பாடு மற்றும் வளர்ச்சி) மசோதா, ரப்பர் (மேம்பாடு மற்றும் வளர்ச்சி) மசோதா உள்ளிட்ட 6 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்நிலையில், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் அலுவல் ஆலோசனைக் குழுவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்துள்ளார்.

சபாநாயகர் தலைமையிலான இந்த குழுவில் சுதீப் பந்தோபாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்), பி.பி. சவுத்ரி (பாஜக), லவ் ஸ்ரீ கிருஷ்ணா தேவராயலு (தெலுங்கு தேசம்), நிஷிகாந்த் துபே (பாஜக), கவுரவ் கோகோய் (காங்கிரஸ்), சஞ்சய் ஜெய்ஸ்வால் (பாஜக), திலேஷ்வர் கமைத் (ஜேடியு), பர்த்ருஹரி மஹ்தாப் (பாஜக), தயாநிதி மாறன் (திமுக), பைஜயந்த் பாண்டா (பாஜக), அரவிந்த் சாவந்த் (சிவசேனா- உத்தவ் தாக்கரே பிரிவு), கொடிகுன்னில் சுரேஷ் (காங்கிரஸ்), அனுராக் தாக்கூர் (பாஜக), லால்ஜி வர்மா (சமாஜ்வாதி) ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.


Next Story