காந்தி, மோடி, யோகி ஆதித்யநாத் தொடர்பான போலி நடன வீடியோ: வழக்குப்பதிவு செய்த போலீசார்


காந்தி, மோடி, யோகி ஆதித்யநாத் தொடர்பான போலி நடன வீடியோ:  வழக்குப்பதிவு செய்த போலீசார்
x

கோப்புப்படம் 

போஜ்புரி மொழி பாடலுக்கு காந்தி, பிரதமர் மோடி தொடர்பான போலி நடன வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தது.

லக்னோ,

மகாத்மா காந்தி, பிரதமர் மோடி, உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் ஒரு போஜ்புரி மொழி பாடலுக்கு ஒரு பெண்ணுடன் ஒன்றாக நடனமாடுவது போன்ற போலி வீடியோ, சமூக வலைத்தளத்தில் வெளியானது.

யாரோ மர்ம நபர்கள் அந்த வீடியோவை தயாரித்து வெளியிட்டுள்ளனர். இதை நேகா சிங் ரத்தோர் என்ற பெண் சமூக ஆர்வலர் கண்டுபிடித்து தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் அம்பலப்படுத்தினார். மேலும் அந்த வீடியோவையும் அவர் வெளியிட்டார். இதுதொடர்பான அவரது பதிவில், "மிகவும் பிரபலமான, வெற்றிகரமான முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களின் மரியாதை, பாதுகாப்பு மற்றும் அதிகாரத்துக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், சில ரீலர்ஸ் ஒரு சில வீயூசுக்காக முதல்-மந்திரி யோகி படத்தை தவறான வகையில் பயன்படுத்தி உள்ளனர். இது மட்டும் இல்லாமல், பிரதமர் மோடி மற்றும் மகாத்மா காந்தி படங்களையும் மலிவான விளம்பரத்துக்காக தவறாக பயன்படுத்தியுள்ளனர்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் பல்லியா போலீஸ் நிலையத்தில் பிரவீன் சிங் என்பவர் புகார் செய்தார். அதன்பேரில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story