சத்தீஷ்கரில் போலி எஸ்.பி.ஐ வங்கி நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த கும்பல்


சத்தீஷ்கரில் போலி எஸ்.பி.ஐ வங்கி நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த கும்பல்
x

போலி எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றை ஆரம்பித்து பல லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

ராய்ப்பூர்,

நாட்டின் முன்னணி வங்கியான எஸ்.பி.ஐ. இன் பெயரில் போலியாக கிளை ஒன்றை நடத்தி பல லட்ச ரூபாயை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரின் 250 கி.மீ தொலைவில் உள்ளது சபோரா கிராமம். இங்கு மர்ம நபர்கள் சிலர், கட்டடம் ஒன்றை, 7 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து எஸ்.பி.ஐ., கிளை என பெயர் பலகை வைத்தனர். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக உண்மையான வங்கி போல், மேஜை, நாற்காலிகள், கண்ணாடி கூண்டுகள் வாங்கி வைத்தனர்.

அதோடு, வேலைக்கு ஆள் எடுப்பதாக கூறி, ஏழைகள், வேலை இல்லாதவர்களை குறிவைத்து ரூ.30 ஆயிரம் சம்பளம் என ஆசை காட்டி உள்ளனர். அவர்களிடம் லட்சக் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கான ஆர்டரை வழங்கி உள்ளனர். யாருக்கும் சந்தேகம் வராதபடி அச்சு அசல், உண்மையான எஸ்.பி.ஐ., வங்கி வழங்கும் உத்தரவை போல் கொடுத்துள்ளனர். அரசு வேலை என்பதால் பலர் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் பணம் கொடுத்து உள்ளனர்.

போலி வங்கி மீது சந்தேகம் வராத அப்பகுதி மக்கள் வரவு, செலவு வைக்க துவங்கி உள்ளனர். இந்த போலி வங்கி அமைந்துள்ள நகரில் இருந்து சற்று தொலைவில் உள்ள தாப்ரா நகரில் செயல்படும் எஸ்.பி.ஐ., கிளையில் கணக்கு வைத்துள்ளவருக்கு போலி வங்கி மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அங்கு சென்று விசாரித்துள்ளார்.

ஊழியர்கள் சரியான பதிலை அளிக்கவில்லை. இதனால், இந்த கிளை குறித்து தனது கணக்கு வைத்துள்ள வங்கி மேலாளரிடம் தகவல் கொடுத்துள்ளார். அவர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.போலீசாரும், எஸ்.பி.ஐ., அதிகாரிகளும் இங்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால், அதற்குள் மோசடியாளர்கள் பணத்துடன் தலைமறைவாகிவிட்டனர். அவர்களில் 4 பேரை அடையாளம் கண்டுள்ள போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.


Next Story