ஓப்போ இந்தியா ரூ.4,389 கோடி வரி ஏய்ப்பு - வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கண்டுபிடிப்பு

Image Courtesy : AFP / Representational Image
இறக்குமதி செய்யப்பட்ட சில பொருள்களின் விலையை அந்த நிறுவனம் தவறாக குறிப்பிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுடெல்லி,
சீனாவின் டோங்குவான் ஓப்போ கைபேசி தொலைத்தொடர்பு கழக நிறுவனத்தின் துணை நிறுவனம் ஓப்போ இந்தியா. இந்த நிறுவனம் ரூ.4,389 கோடி சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது.
இந்தியா முழுவதும் உற்பத்தி வடிவமைத்தல் மொத்த வியாபாரம் உள்ளிட்டவற்றில் ஓப்போ இந்தியா ஈடுபட்டுள்ளது. ஒன் பிளஸ் மற்றும் ரியல் மீ உள்ளிட்ட பல்வேறு கைபேசி நிறுவனங்களுடனும் ஓப்போ இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நிலையில் ஓப்போ இந்தியா அலுவலகம் அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் வருவாய் புலனாய்வு துறை சோதனை நடத்தியது. அப்போது கைபேசி உற்பத்தி செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்ட சில பொருள்களின் விலையை அந்த நிறுவனம் தவறாக குறிப்பிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மூத்த நிர்வாக பணியாளர்கள் மற்றும் உள்ளூர் விநியோகஸ்தர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட போது அவர்கள் இறக்குமதியின் போது சுங்க அதிகாரிகளிடம் தவறான தகவல்களை அளித்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இறுதியில் அந்த நிறுவனம் ரூ.4,389 கோடி சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.