மம்தா பானர்ஜியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி டாக்டர்கள் சந்திப்பு


மம்தா பானர்ஜியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி டாக்டர்கள் சந்திப்பு
x

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி டாக்டர்கள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்தனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பெண் பயிற்சி டாக்டர் கடந்த மாதம் 9ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டும், இக்குற்றச்செயலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யக்கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதேபோல், குற்றச்சம்பவம் நடைபெற்ற இடத்தில் தடயங்களை அழிக்க முயன்றதாக கூறி கொல்கத்தா போலீஸ் கமிஷனர், மாநில சுகாதாரத்துறை செயலாளர், துணை செயலாளர்கள் 2 பேர் என 4 பேர் பதவி விலகக்கோரியும் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போராட்டத்தால் கொல்கத்தாவில் மருத்துவ சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், பயிற்சி டாக்டர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. அதேவேளை, மாநில அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதும் பயிற்சி டாக்டர்களின் நிபந்தனைகளை ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பயிற்சி டாக்டர்களை மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று நேரில் சந்தித்தார். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தயவு செய்து பணிக்கு திரும்புங்கள் என்றும் பயிற்சி டாக்டர்களிடம் மம்தா கோரிக்கை விடுத்தார். இதுதான் கடைசி முயற்சி என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி டாக்டர்கள் இன்று சந்தித்தனர். மம்தா பானர்ஜியின் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது, தங்கள் கோரிக்கைகள் குறித்து மம்தா பானர்ஜியிடம் பயிற்சி டாக்டர்கள் எடுத்துரைத்தனர். மம்தா பானர்ஜி - பயிற்சி டாக்டர்கள் சந்தித்ததையடுத்து போராட்டம் விரைவில் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story