மதுபான ஊழல் வழக்கு; டெல்லி துணை முதல்-மந்திரி சிசோடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன்


மதுபான ஊழல் வழக்கு; டெல்லி துணை முதல்-மந்திரி சிசோடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன்
x
தினத்தந்தி 18 Feb 2023 4:53 PM GMT (Updated: 18 Feb 2023 5:02 PM GMT)

டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.

மதுபான ஊழல்

டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கி, சலுகைகளை அளித்தது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்த ஊழலில் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா பெயரும் அடிபட்டு வருகிறது. அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் சோதனை நடத்தியது. கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி அவரது அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதை பழிவாங்கும் நடவடிக்கை என்று கெஜ்ரிவால் சாடினார்.

மணிஷ் சிசோடியாவுக்கு சம்மன்

இந்த ஊழலில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 3 மாதங்கள் ஆகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் மணிஷ் சிசோடியாவின் பெயர் இடம் பெறவில்லை. கைது செய்யப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் நாயக், அபிசேக் போயின்பள்ளி உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாக காட்டப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா நாளை(ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்விகள் எழுப்பி பதில்களைப் பெற்று பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story