'அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம்' - ஆம் ஆத்மி மந்திரி அதிர்ச்சி தகவல்


அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் - ஆம் ஆத்மி மந்திரி அதிர்ச்சி தகவல்
x

Image Credits : ANI News

தினத்தந்தி 4 Jan 2024 2:25 AM GMT (Updated: 4 Jan 2024 5:12 AM GMT)

மூன்றாவது முறையாக நேற்று ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது.

புதுடெல்லி,

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த நவம்பர் 2ம் தேதி ஆஜராகும் படி சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுடன் இணைந்து பேரணி ஒன்றில் கலந்துகொண்டதால் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதையடுத்து, 2 வது முறை ஆஜராக கடந்த மாதம் 21 ஆம் தேதி அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் 10 நாள் தியானப் பயிற்சியில் ஈடுபட இருப்பதால் விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து நேற்று பிற்பகல் திடீரென அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலம் புறப்பட்டுச் சென்றார்.

இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக நேற்று ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேற்று ஆஜராக இயலவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் அனுப்பி இருந்தார். விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளதாகவும் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் என்னை கைது செய்யும் நோக்கத்தோடு இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லி மாநில ஆம் ஆத்மி மந்திரி ஆதிஷி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அவர் நேற்று தனது எக்ஸ் வலைத்தள் பக்கத்தில், 'நாளை (இன்று) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்த இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது' என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story