இந்தியாவில் 324 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று


இந்தியாவில் 324 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று
x
தினத்தந்தி 21 May 2024 1:21 PM GMT (Updated: 21 May 2024 1:32 PM GMT)

இந்தியாவில் புதிதாக 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை சிங்கப்பூரில் புதிதாக 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதில் கே.பி.1 மற்றும் கே.பி.2 எனப்படும் 2 வகையான உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிக அளவில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் புதிதாக 324 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 290 பேருக்கு கே.பி.2 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 34 பேருக்கு கே.பி.1 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 36 பேருக்கும், ராஜஸ்தானில் 21 பேருக்கும், உத்தரகாண்டில் 16 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தீவிரமான பாதிப்புகள் யாருக்கும் ஏற்படவில்லை என்றும், உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் காரணமாக அச்சமடைய தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story