3வது முறை ஆட்சியில் பிரதமர் மோடியின் அரசு தோற்றுவிட்டது - காங்கிரஸ் விமர்சனம்


3வது முறை ஆட்சியில் பிரதமர் மோடியின் அரசு தோற்றுவிட்டது - காங்கிரஸ் விமர்சனம்
x

3வது முறை ஆட்சியில் பிரதமர் மோடியின் அரசு தோற்றுவிட்டதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசின் 3-வது ஆட்சிக் காலத்தின் முதல் 100 நாட்களில் நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து துறைகளுக்கும் தீர்வுகாண முயற்ச்சித்துள்ளோம் என்றும் 140 கோடி இந்தியர்கள் நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற உறுதியளித்துள்ளனர் என்றும் பிரதமர் மோடி இன்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 3வது முறை ஆட்சியில் பிரதமர் மோடியின் அரசு தோற்றுவிட்டதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

நரேந்திர மோடிக்கு நமது கேள்விகள்

• அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களுக்கு தொலைநோக்குப் பார்வை இருக்கிறதா?

• அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்த நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

• பொருளாதாரம், பணவீக்கம், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சமத்துவமின்மை குறித்து உங்கள் திட்டம் என்ன?

• செபி மற்றும் அதானி பற்றி எப்போது பேசுவீர்கள்?

• அரசியல் பழிவாங்கலுக்கு புலனாய்வு அமைப்புகள் எவ்வளவு காலம் பயன்படுத்தப்படும்?

மணிப்பூர் மோடி அரசின் உண்மையான தோல்வி

மணிப்பூர் 16 மாதங்களாக எரிகிறது. அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது, இதில் ஆளில்லா விமானங்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஆர்பிஜிகள் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த இரண்டு வாரங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. அவர்களின் ஆயுதங்களை பறிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால் இன்றுவரை நரேந்திர மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரம் கிடைக்கவில்லை. பிரச்சனைகளை சமாளிக்க உங்களிடம் எந்த திட்டமும் இல்லை என்பதே உண்மை.

சீனாவின் அத்துமீறல்

சீனாவின் அத்துமீறல் குறித்து மோடி அமைதியாக இருக்கிறார். இதனால் கோபமடைந்த லடாக் மக்கள் தெருக்களில் இறங்கினர். அங்குள்ள ஆடு மேய்ப்பவர்கள் கூறுகின்றனர் - சீனாவின் அத்துமீறலால், முன்பு சென்ற தூரம் வரை செல்ல முடியவில்லை என்று.

21 கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான கூட்டத்தில், உங்கள் பிரதமர் நரேந்திர மோடியே - 'யாரும் உள்ளே நுழையவில்லை' என்று சீனா திரும்பத் திரும்ப சொல்கிறது.

உங்களால் சீனாவின் பெயரை கூறக் கூட முடியவில்லை, ஏப்ரல் 2020 நிலவரத்தை உங்களால் பராமரிக்க முடியவில்லை. எனவே லடாக் முழுவதுமே இன்று டெல்லியை நோக்கி அணிவகுத்து நிற்கிறது என்பதே நிதர்சனம்.

விவசாயிகளைப் போல் நரேந்திர மோடி அவர்களின் பாதையில் ஆணி அடிப்பாரா..?

மோடியின் 100 நாட்களில் நடந்தவை

26 பயங்கரவாத தாக்குதல்கள் ,

பெண்களுக்கு எதிரான 104 குற்றச் சம்பவங்கள்,

56 உள்கட்டமைப்பு சரிவு சம்பவங்கள்,

38 ரெயில் விபத்துகள்,

தேர்வுத்தாள் கசிவு,

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி,

அந்நிய முதலீடு (FDI) 43 சதவீத குறைவு,

வேலையின்மை 8 மாத சாதனையை முறியடித்தது,

பொருளாதாரம் ஆபத்தில் உள்ளது.

பிரதமர் மோடியிடம் எழுப்பப்படும் கேள்விகள், "லடாக்கில் சீனாவின் அத்துமீறல் குறித்து மௌனம் காப்பது ஏன்?... மணிப்பூரைப் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?... எங்கள் தேசத்திற்காக நீங்கள் என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?... பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் பிற அழுத்தமான பிரச்சனைகளைப் பற்றி நீங்கள் என்னசொல்லப் போகிறீர்கள்?"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story