பைரவரை வணங்க உகந்த அஷ்டமி


பைரவரை வணங்க உகந்த அஷ்டமி
x

பைரவரை வழிபட்டால் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஜென்மச்சனி, அர்த்தாஷ்டமச்சனி போன்ற சனி தோஷங்கள் விலகி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அசுரர்களை வதம் செய்து, நல்லவர்களை காப்பதற்காக சிவ பெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவர் பைரவர். பைரவருடைய உடலின் அங்கங்களில் 12 ராசிகளும் நிறைந்துள்ளன. பைரவரின் சேவகர்களாக நவக்கிரகங்களும் இருப்பதால் தன்னை வணங்கக் கூடிய பக்தர்கள் எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்தக் கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்தில் இருந்தும் விடுவிப்பார். பைரவரை வழிபட ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஜென்மச்சனி, அர்த்தாஷ்டமச்சனி போன்ற சனி தோஷங்கள் விலகி விடும் என்பது நம்பிக்கை.

பைரவப்பெருமானை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளாகும். ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். எனவே அன்று பைரவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம். குறிப்பாக அவர் அவதரித்த தேய்பிறை அஷ்டமி நாளில் வணங்குவது சிறப்பானது.

பைரவ உருவங்களில் பல உண்டு என்றாலும் பிரதானமானவராகக் கருதப்படுபவர் கால பைரவர். காசி கோவிலில் கால பைரவர்தான் பிரதானமாக வணங்கப்படுகிறார். சிவன் கோவில்களில் கால பைரவர்தான் காவல் தெய்வமாக விளங்குகிறார். காலனாகிய எமனையே சம்காரம் செய்து மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த மூர்த்தி இவர். எனவே இவரை கால சம்கார மூர்த்தி என்றும் அழைக்கின்றனர்.


Next Story