யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' படத்தின் புகைப்படம் கசிந்ததால் படக்குழுவுக்கு கட்டுப்பாடு


யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் புகைப்படம் கசிந்ததால் படக்குழுவுக்கு கட்டுப்பாடு
x

‘டாக்ஸிக்’ படத்தின் புகைப்படம் கசிந்ததால் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் செல்போன்களை கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. அதை தொடர்ந்து யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். டாக்ஸிக் படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார். ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு கர்நாடகா போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் இப்படமானது 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்சன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

படத்தில் கியாரா அத்வானி நடிக்கிறார். ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பெங்களூருவில் பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வருகிறது. இதில் யாஷ் பங்கேற்ற காட்சி ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் கசிந்தது. இது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் யாஷ் அருகில் நிற்கும் பெண் ஹுமா குரேஷி என்று கூறப்படுகிறது.

மிகுந்த கட்டுப்பாட்டுடன் படப்பிடிப்பு நடந்தாலும் புகைப்படம் கசிந்தது குறித்து படக்குழுவினரிடம் தயாரிப்பு தரப்பு விசாரித்து வருகிறது. அதோடு குறைவான ஆட்களை படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பயன்படுத்தவும் செல்போன்களை கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Next Story