'வேட்டையன்' படம் நன்றாக வந்துள்ளது - லதா ரஜினிகாந்த்


ரஜினி, அமிதாப் பச்சன் நடித்துள்ள 'வேட்டையன்' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க, இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். என்கவுன்டர் தொடர்பான ஆக்சன் படமான இதில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களான இவர்கள் இருவரும் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்த நிலையில், டிரெய்லரும் பலரும் கவனிக்கும் வகையில் அமைந்தது. இப்படி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கும் 'வேட்டையன்' திரைப்படம், உலகமெங்கும் இன்று வெளியாகிறது.

தமிழக திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் வெளியாக இருந்தநிலையில், இன்று ஒருநாள் கூடுதலாக ஒரு சிறப்புக்காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய இப்படத்தின் முதல் காட்சியில் ரசிகர்களுடன் சேர்ந்து பிரபலங்கள் படம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை ரோகினி திரையரங்கில் நடிகர் தனுஷ், இயக்குனர் ஞானவேல், ரித்திகா சிங், அதிதி ஷங்கர், அபிராமி, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ரஜினியின் குடும்பத்தினரான லதா ரஜினிகாந்த், அவரது இரண்டு மகள்கள் என பல பிரபலங்கள் ரசிகளுடன் சேர்ந்து படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

சென்னை ரோகிணி திரையரங்கில் வேட்டையன் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்த பின், லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்

வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது. வேட்டையன் படத்தில் நல்ல கருத்து சொல்லப்பட்டுள்ளது. வேட்டையன் படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள் என்று லதா ரஜினிகாந்த் கூறினார். மேலும் ரஜினிகாந்த் எப்படி இருக்கிறார்? என்ற கேள்விக்கு 'நன்றாக இருக்கிறார்' என்று அவர் கூறினார்.


Next Story