ரூ.2 கோடி கேட்டு கொலை மிரட்டல்.. நடிகை பார்வதி நாயரின் உருக்கமான அறிக்கை


ரூ.2 கோடி கேட்டு கொலை மிரட்டல்.. நடிகை பார்வதி நாயரின் உருக்கமான அறிக்கை
x

நடிகை பார்வதி நாயரின் வீட்டில் வேலை செய்த சுபாஷ் என்பவர் ரூ.2 கோடி கேட்டு மிரட்டல் விடுப்பதாகவும், தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்புவதாகவும் நடிகை பார்வதி நாயர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மாளவிகா நாயர், சமீபத்தில் வெளியான விஜய்யின் 'தி கோட்' படத்திலும் நடித்திருந்தார்.

இவ்வாறு முன்னணி நடிகையாக இருக்கும் இவர் கடந்த 2022-ம் ஆண்டு தனது வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போனதாகவும் அதில் வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து தன்னை, பார்வதி நாயர் உள்பட 7 பேர் தாக்கியதாக சுபாஷும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சுபாஷ் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கடந்த மாதம் 29-ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில், பார்வதி நாயர் உள்பட 7 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் நடிகை பார்வதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "என் அலுவலகத்தில் உதவியாளராக இருந்த சுபாஷ் என்பவர் தொடர்ந்து மிரட்டி என்னிடம் ரூ. 2 கோடி பணம் கேட்டு அவதூறு பரப்புகிறார். புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். உண்மையான அநீதிக்கு ஆளானவர்களைக் காக்கும் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தி, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, என்னிடம் பணம் பறிக்க முயல்கிறார். நான் எந்த தவறும் செய்யாததால், அவர்களின் சட்ட விரோதமான கோரிக்கைகளை ஏற்க நான் தயாராக இல்லை. மேலும், என் மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளை நான் ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. சமீபத்தில் பல்வேறு யூடியூப் சேனல்களுக்குப் பல தவறான நேர்காணல்களை அளித்து, என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி, புகழ் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து என்னை வற்புறுத்தினார். மேலும், இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நடக்கும் நிலையில் நீதி நிச்சயம் வெல்லும்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story