சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற " ரத்தமாரே " படக்குழுவினர்


The crew of Rathamaarey congratulated Superstar Rajini
x

மூன்று மனிதர்கள் வாழ்வில் மூன்று கோணங்களில் நடக்கும் கதையாக "ரத்தமாரே " உருவாகி இருக்கிறது.

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் அனிருத் இசையில் இடம் பெற்ற" ரத்தமாரே ரத்தமாரே " என்ற பாடலை பாடாத வாய்கள் இல்லை, கேட்காத காதுகள் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இப்படி பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இந்த பாடல் வரியை தலைப்பாக வைத்து சிறப்பான படம் ஒன்று உருவாகி இருக்கிறது.

அதன்படி, மூன்று மனிதர்கள் வாழ்வில் மூன்று கோணங்களில் நடக்கும் கதையாக "ரத்தமாரே " என்ற படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் லிவிங்ஸ்டன், வையாபுரி, அம்மு அபிராமி, பிரசாத், ரமா, ஜனனி, அசார், மகிமா, ஸ்ரீஜித் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தினேஷா ரவிச்சந்திரன். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து " ரத்தமாரே " படக்குழுவினர் வாழ்த்து பெற்றுள்ளனர்.

இப்படம் பற்றி இயக்குனர் தினேஷா ரவிச்சந்திரன் கூறுகையில்,

'அச்சம், மடம் , பயிர்ப்பு என்ற மூன்று நிலைகளில், மனிதர்கள் வாழ்வில் மூன்று கோணங்களில் நடக்கும் சம்பவங்களை, அடர்த்தியான திரைக்கதையைக் கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இயங்கி வருகிறோம்.

என் வாழ்வில் நான் பார்த்த என்னை பாதித்த, இந்த சமூகத்தில் மாறவேண்டிய, மாற்றவேண்டிய சில முக்கிய சம்பவங்களை இதில் அழுத்தமாக பதிவு செய்துள்ளேன்.

இந்த படத்தின் மூலம் அது மாறும் என்றும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ரத்தமாரே தலைப்பிற்காக மரியாதை நிமித்தமாக சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றோம். அது எங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறோம்,' என்றார்


Next Story