'மகாராஜா' பட டைரக்டரை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி


மகாராஜா பட டைரக்டரை  நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி
x

ரஜினி "மகாராஜா" திரைப்படத்தின் டைரக்டர் நித்திலன் சாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

சென்னை,

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் 'மகாராஜா'. இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. விஜய் சேதுபதியின் 50- வது திரைப்படமான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கும் ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மக்களின் வரவேற்பை பெற்றது. ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கி மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார். இதன் எதிரொலியால், படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது. திரை வெற்றியைத் தொடர்ந்து ஓ.டி.டி.யிலும் மக்களின் வரவேற்பை பெற்றது.

திரை பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தை பாராட்டி வந்தனர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இது குறித்து நித்திலன் சாமிநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். "அன்புள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார். உங்களை சந்திக்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. கோலிவுட்டின் தங்க கரங்களிலிருந்து வாழ்க்கை, அனுபவம் பற்றிய நாவலை படிப்பது போன்று இருந்தது. உங்களின் விருந்தோம்பல் மற்றும் பணிவு கண்டு நான் வியப்படைக்கிறேன். மகாராஜா படத்தை நீங்கள் எந்த அளவிற்கு நேசித்துள்ளீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி மற்றும் வாழ்க தலைவர்" என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியுடன் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story