விஜய் சேதுபதியுடன் மீண்டும் வித்தியாசமான படம் மூலம் இணையும் நித்யா மேனன்


விஜய் சேதுபதியுடன் மீண்டும் வித்தியாசமான படம் மூலம் இணையும் நித்யா மேனன்
x

நடிகர் விஜய் சேதுபதி - நித்யா மேனன் இணைந்த வித்தியாசமான ஜானரில் ஒரு படம் உருவாக உள்ளது என்பதை பேட்டி ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளார் நடிகை நித்யா மேனன்.

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் சமீபத்தில் நடைப்பெற்றது. இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் வென்றார்.

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து ஆறுமுக குமார் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் குறித்த அப்டேட் ஒன்று ஏற்கனவே வெளியாகி இருந்தாலும் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் லீட் ரோலில் நடிக்கும் படம் ஒன்று உருவாக உள்ளது. நித்யா மேனன் கொடுத்த பேட்டி ஒன்றில் இது குறித்து உறுதிப்படுத்தி உள்ளார்.

ஏற்கனவே 19 (1) (ஏ) என்ற மலையாள படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் இணைந்து நடித்துள்ளனர். மீண்டும் அவர்கள் ஒரு படத்தில் இணைவது குறித்து நித்யா மேனன் பேசுகையில் "அந்த படத்தில் எங்க இரண்டு பேரோட காம்பினேஷன் காட்சி ரொம்ப சின்னதா இருந்துது. இரண்டு நாட்கள் மட்டுமே அதன் படப்பிடிப்பு நடந்தது. அப்போ நாங்க இரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணனும் என பேசி இருந்தோம். இப்போ நாங்க நடிக்க போற இந்த ஸ்கிரிப்ட்டை விட வேற ஒரு நல்ல ஸ்கிரிப்ட் எங்களுக்கு கிடைச்சு இருக்காது. இந்த படத்தில் நடிப்பதை நான் மிகவும் எக்ஸ்சைடட்டா பீல் பண்றேன். ரொம்பவே தனித்துவமான ஒரு கேரக்டர். வழக்கமா நான் செய்ற ஜானரை காட்டிலும் இது ரொம்பவே வித்தியாசமானது. பல வகையான ஜானர்களில் நடிப்பது எனக்கு ரொம்பவே பிடிக்கும்" என பேசி இருந்தார் நடிகை நித்யா மேனன்.


Next Story