மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ?


மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ?
x

இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமுடன் இணைந்து 'பைசன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சென்னை,

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'வாழை'. இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தநிலையில், 'வாழை' படத்தினை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமுடன் இணைந்து 'பைசன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கிடையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் மாரி செல்வராஜிடம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து எப்போது படம் எடுக்க போகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படம் செய்ய விரும்புகிறோம் என்றார். என்னுடைய இயக்கத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்' போன்ற படங்களைப் பார்த்துவிட்டு ரஜினி என்னை அழைத்தார். மேலும், எங்களுடைய அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" என்றும் கூறியுள்ளார்.

தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வேட்டையன்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி வெளியாக உள்ளது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜுடன் 'கூலி' படத்தில் நடிக்க உள்ளார். மேலும், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெய்லர் 2' படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story